நம்பியாண்டார் நம்பி அருளியது |
பதினோராம் திருமுறை |
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி |
கட்டளைக் கலித்துறை |
1200
பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. |
1 |
1201
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. |
2 |
1202
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே
பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த
ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. |
3 |
1203
இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்
பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்
தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. |
4 |
1204
மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்
துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. |
5 |
1205
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர
வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த
கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. |
6 |
1206
வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய
உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. |
7 |
1207
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. |
8 |
1208
குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்
அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே. |
9 |
1209
முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்
பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. |
10 |
1210
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. |
11 |
1211
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. |
12 |
1212
வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. |
13 |
1213
அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. |
14 |
1214
நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. |
15 |
1215
நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த
குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்
சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று
நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. |
16 |
1216
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே
போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி
ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது
காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. |
17 |
1217
கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்
வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ
டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. |
18 |
1218
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்
சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. |
19 |
1219
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்
திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. |
20 |
1220
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்
வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. |
21 |
1221
வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. |
22 |
1222
மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்
பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. |
23 |
1223
அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த
இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. |
24 |
1224
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்
வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. |
25 |
1225
சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்
சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. |
26 |
1226
திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்
கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. |
27 |
1227
எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்
குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. |
28 |
1228
கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா
நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்
டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. |
29 |
1229
எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்
வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்
றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. |
30 |
1230
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்
அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. |
31 |
1231
கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்
செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. |
32 |
1232
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்
டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. |
33 |
1233
உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்
பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. |
34 |
1234
இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்
புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்
நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. |
35 |
1235
மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்
தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்
கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. |
36 |
1236
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்
தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா
முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. |
37 |
1237
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே
தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. |
38 |
1238
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ
டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. |
39 |
1239
இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்
பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை
அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த
பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. |
40 |
1240
பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. |
41 |
1241
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த
பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. |
42 |
1242
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்
தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்
றந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. |
43 |
1243
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி
வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த
கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. |
44 |
1244
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்
றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. |
45 |
1245
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. |
46 |
1246
குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்
றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. |
47 |
1247
இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. |
48 |
1248
வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. |
49 |
1249
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி
எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. |
50 |
1250
கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே. |
51 |
1251
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்
துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே. |
52 |
1252
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்
கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே. |
53 |
1253
கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்
தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே. |
54 |
1254
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்
புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே. |
55 |
1255
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்
வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே. |
56 |
1256
கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை
இட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்
விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே. |
57 |
1257
உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற
துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்
புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்
நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே. |
58 |
1258
நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்
காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே. |
59 |
1259
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்
சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து
வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்
ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே. |
60 |
1260
அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய
பெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்
வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே. |
61 |
1261
தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்
வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. |
62 |
1262
நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர்
புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்
தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே. |
63 |
1263
மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்
குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. |
64 |
1264
அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன
பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்
சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே. |
65 |
1265
தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்
போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே. |
66 |
1266
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்
தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. |
67 |
1267
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்
ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே. |
68 |
1268
நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்
துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய
நதியுறு நீர்தெளித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே. |
69 |
1269
மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே. |
70 |
1270
ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே. |
71 |
1271
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த
இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வெளிதே. |
72 |
1272
எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே. |
73 |
1273
அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்
துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே. |
74 |
1274
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே. |
75 |
1275
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே
மன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க
நன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே. |
76 |
1276
நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்
டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்
பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே. |
77 |
1277
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த
அனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே. |
78 |
1278
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்
பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே. |
79 |
1279
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே. |
80 |
1280
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து
நிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே. |
81 |
1281
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்
றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே. |
82 |
1282
வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்
சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே. |
83 |
1283
பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்
கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்
திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே. |
84 |
1284
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. |
85 |
1285
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்
தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த
காட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே. |
86 |
1286
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்
திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே. |
87 |
1287
கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி
அடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்
முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே. |
88 |
1288
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே. |
89 |
1289
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா
தெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த
பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர்
அத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே. |
90 |
1290
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்
றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே. |
91 |
1291
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று
தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. |
92 |
1292
தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. |
93 |
1293
பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்
றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே. |
94 |
1294
இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று
முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்
செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்
கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே. |
95 |
1295
ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்
மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்
ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
தீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே. |
96 |
1296
செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே. |
97 |
1297
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. |
98 |
1298
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த
பேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்
காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. |
99 |
1299
பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை
சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. |
100 |
1300
பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்
ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்
தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள். |
101 |
திருச்சிற்றம்பலம் |